Friday, February 14, 2014

Inspiring Stories

மளிகைக் கடைக்காரர் நடத்தும் பள்ளிக்கூடம். கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன். 10 ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றி முதல்முறையாகக் கேள்விப்பட்ட முதல் செய்தியே இன்றைக்கும் அசரடிக்கவைக்கக் கூடியது. “ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார். படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.” அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிரமணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள். விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி. “அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன். இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள – படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது” என்கிற பாலுஜி, இரு ஆசிரியர்களை அறிமுகப்படுத்தினார். ஒருவர் ராதாகிருஷ்ணன். இன்னொருவர் அகிலா. “ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே மூத்தவர். இங்கே படிச்சவர். சுகாதாரத் துறையில தஞ்சாவூர் பக்கத்துல உள்ள வல்லத்துல வேலை செய்றார். தினமும் 100 கி.மீ. பயணம் செஞ்சாலும் இங்கே ஒரு நாள் விடாம வந்துபோதிக்கிறார். அகிலா இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே சின்ன பொண்ணு. ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டே, இங்கே உள்ள பிள்ளைகளுக்கு இந்தி கத்துக்கொடுக்கிறார். இங்குள்ள 38 ஆசிரியர்களும் இப்படித்தான்” என்கிற பாலுஜி அடுத்தடுத்து சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை. “இங்கே வர்ற நிறைய பேர் ஏதோ காசு வாங்காம கல்வி கொடுக்குறதுதான் பெரிய காரியம்னு நெனைக்குறாங்க. அது இல்லை. இங்கே நாங்க எதைக் கல்வியா கொடுக்குறோம்கிறதுதான் முக்கியம்னு நாங்க நெனைக்கிறோம். பணம்தான் உலகம்னு ஓடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு மத்தியில, பணம் மட்டும் வாழ்க்கை இல்லைனு சொல்லிக்கொடுக்குறோம். அறம்தான் உண்மையான வாழ்க்கையோட ஆதாரம்னு சொல்லிக்கொடுக்குறோம். இங்கே படிச்ச ஒரு மாணவர் சுங்கத் துறையில ஒரு பெரிய பதவிக்கு, நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைச்சுப் போனார். கொஞ்ச நாள்ளேயே அந்த வேலை வேணாம்னு சொல்லி ஒதுங்கிட்டார். காரணம் என்ன தெரியுமா? லஞ்சம் வாங்காம, லஞ்சம் வாங்குறதைத் தடுக்காம அங்கே வேலை பார்க்க முடியாதுங்கிற சூழல். எங்க பிள்ளைங்க ஒருபோதும் தவறான பாதையில போக மாட்டாங்க. பணத்துக்குப் பின்னாடி ஓட மாட்டாங்க. இதைச் சொல்லிக்கொடுக்குறதுதான் முக்கியம்னு நெனைக்குறேன்” என்று சொல்லும் பாலுஜி எங்கிருந்து இந்த அறவுணர்வைப் பெற்றார்? எப்படி அதை அணையாமல் காக்கிறார்? பாலுஜியின் பதில்: காந்தி. “செம்பியன்மாதவிங்கிற குக்கிராமத்துல உள்ள காந்தியடிகள் நடுநிலைப் பள்ளிதான் எனக்குள் காந்தியை விதைச்சுது. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துன தாளாளர் ஆர்.என்.ராமசாமியும் ஆசிரியர் வி.ராமச்சந்திரனும் படிப்பைவிட முக்கியம் அறம்னு சொல்லி எங்களை வளர்த்தாங்க. நல்ல விஷயங்களை அடுத்தவங்களுக்குப் போதிக்கிறதைவிட முக்கியம், நாம பின்பற்றுவதுனு சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ அவங்க எங்களுக்குச் சுட்டிக்காட்டின வழிகாட்டி காந்தி. தான் உண்மைனு நினைச்ச அறத்துக்காகக் கடைசிவரைக்கும் வாழ்ந்தார் காந்தி. அந்த வைராக்கியம் வந்துடுச்சுன்னா எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அறம் நம்மையும் காப்பாற்றும்!”

=======================================================================

மனிதம் வளர்க்கும் மனிதர் !!

இடம் திருப்பூர் ரயில்வே மேம்பாலம், இருட்டு விழுந்து விட்ட மாலை நேரம். மேம்பாலத்தின் ஏற்றம் துவங்கி சற்று ஏறியும் விட்ட மேட்டில் இந்த சகோதரர் கொஞ்சம் கலங்கிய முகத்துடன் தன்னுடைய மூன்று சக்கர வண்டியை மேட்டில் தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதாய்த் தோன்றியது. என்னுடைய வண்டியை ஓரம் கட்டி விட்டு என்ன பிரச்சினை என்று விசாரித்தேன்.

“வண்டியின் சங்கிலி கழன்று விட்டது வண்டி ஓட்ட முடியாமல் சரிவில் இழுக்கிறது, கால் மணி நேரமாக சிரமப்பட்டு நிற்கிறேன், நீங்களாவது வந்தீங்களே கொஞ்சம் சங்கிலியை மாட்டித் தந்தா நல்லா இருக்கும்” என்றார். 

சங்கிலியை மாட்டிக் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் அது ஒரு பழைய டிவிஎஸ் 50 மூன்று சக்கர வண்டியாக மாற்றி ஓட்டிக்கொண்டிருக்கிறார், இருக்கைக்கு நுரைபஞ்சும், உறையும் கூட மாற்ற முடியாமல் ஒட்டப் பயன்படும் செல்லொ டேப்புகள் கொண்டு ஒட்டியிருக்கிறார். பின்னால் வைத்துக் கட்டப்பட்ட பிளாஸ்டிக் கூடையில் சாப்பாட்டுப் பொட்டலங்கள். சரி வறுமையிலுள்ள உணவு விற்கும் சிறு வியாபாரி என்று நினைத்துக் கொண்டு இந்த மாதிரியான இரண்டும் கெட்டான் நேரத்தில் வியாபரத்திற்கு கிளம்பினால் உங்களுக்கு எப்படி வருமானம் கிடைக்கும் என்று நான் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் சவுக்கால் அடித்தது.

தம்பி நான் இதை விக்கிறதுக்காகக் கொண்டு வரல. எனக்கு கைல தொழிலும், குடும்பமும் இருக்கு. ஆனா குடும்பமும் இல்லாம, இருக்க வீடும் இல்லாம அதனாலயே வருமானமும் தேடிக்க முடியாம ரோட்டில கிடந்து சிரமப்படற பல பேர் நிறைய நாள் சோத்துக்கு என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சுப் பாத்து அவங்களுக்கு என்னால முடிஞ்சது இந்தக் கூடை நிரம்பற அளவுக்கு சோறாக்கி அவங்க இருக்கிற இடம் தேடிப் போய் அவங்க பசியாத்திக்கிட்டு இருக்கேன். 

இதைக் கேட்ட பிறகு அவரோடு என்னை ஒப்பிட்டுப் பார்க்கக் கூட என் மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை. அவரோடு பேசிய அந்த நிமிடம் மண்ணையும் நீரையும் கொன்று அதில் காசு வளர்க்கும் இந்தத் திருப்பூரில் கூட மனிதம் வளர்க்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களா என்ற கேள்வியையும், நான் இருக்கும் போது கூட என் ஊரில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்விக்கான விடையையும் அது தந்தது.

அவரைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பி பல முறை முயன்ற பிறகு இந்தப் படம் கிடைத்தது. வழக்கம் போல எங்களைக் கடந்து விரைந்து, விரைந்து சென்று கொண்டிருந்த வாகனங்களின் ஒளிச்சிதறலால் இவரை இந்த அளவிற்கு மட்டுமே என் செல்பேசியால் படம் எடுக்க முடிந்தது…… 

எதுவுமே பேசத் தோன்றாமல் கொஞ்ச நேரம் அவருடன் நின்று கொண்டிருக்க மட்டுமே முடிந்தது கண்ணில் கொஞ்சம் நீருடன்…

- ராஜு மாரியப்பன்

=====================================================================

ஒற்றை காலுடன் சிகரம் தொட்ட சாதனை பெண்

கை கால் நல்லாயிருந்தும் புலம்புவோர் மத்தியில் , நல்ல உடல் நலம் உற்றார் இருந்தும் வாழ்கையை வெறுத்து வாடுவோர் சுற்றியிருக்க ..இதோ ஒரு சாதனை நாயகி ....

<<<<<<<<<<<

# ஒற்றை காலுடன் சிகரம் தொட்ட சாதனை பெண் #

ஒற்றை காலுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் அருணிமா சின்கா என்ற பெண்.
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி உத்திர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார் தேசிய அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற அருணிமா சின்கா(வயது 25).
அப்போது, அவர் இருந்த பெட்டியில் நுழைந்த கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி பணம், நகையைப் பறித்தனர்.
இதைப் பார்த்த அருணிமா கொள்ளையர்களை விரட்ட தொடங்கினார். எனினும் கொள்ளையர்கள் அதிகம் பேர் இருந்த காரணத்தினால் அவரால் விரட்ட முடியவில்லை.
இந்நிலையில் அருணிமாவை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினர்.
அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது ரயில் ஏறியது.
இறந்தே விட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் வலது காலை மட்டும் இழந்தார்.
ஓராண்டு சிகிச்சை பெற்ற அந்த பெண் காலை இழந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை.
கொஞ்சமாக தொங்கிக் கொண்டிருந்த வலது காலில் செயற்கை காலை பொருத்தி இமயமலை மீது ஏறும் பயிற்சி பெற்றார்.
அதில் அவர் தேர்ச்சி பெறவே கடந்த ஏப்ரலில் “உலகின் மிகப் பெரிய சிகரம்” எவரெஸ்ட் மீது ஏறி சாதனை படைத்தார்.
இதன் மூலம் ஒரு காலை இழந்த எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை அருணிமா பெற்றார்.
அதற்குப் பிறகு உலகப் புகழ் பெற்ற அருணிமாவுக்கு பணம், புகழ் குவிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கிடைத்த பணத்தைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி பள்ளி தொடங்க உள்ளார்.

# Royal Salute To This Brave Heroine

நன்றி : yarlminnal.com

==============================================================




No comments:

Post a Comment